உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆனபோதே நடக்கத் துவங்கி விட்டாராம்! நம் உமர் தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!

ஏன் இந்த ஒப்பீடு? செயற்கரிய செயல்களைப் பிற்காலத்தில் செய்ய இருப்பவர்களின் தொடக்க வாழ்வு, பெரும்பாலும் இப்படித்தான் இருந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

இரண்டு, மூன்று வயதில் தன் மழலை வாயால் திருக்குறள்களை ஒப்புவிப்பார்! அந்த வயதிலேயே டார்ச் விளக்கு மூடியைத் திறந்து, பேட்டரி செல்களை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்! அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பே எடிசன், மார்க்கோனி, ஸ்டீவன்சன், ஜேம்ஸ் வாட் இவர்களைப் பற்றிக் கதையாகச் சொல்வேன். அவரை விஞ்ஞானி ஆக்கவேண்டும் என்பது என்னுடைய அன்றைய ஆர்வம்! பேராசைதான். தன் உடன்பிறப்பை உயர்ந்தவனாக ஆக்கிப் பார்க்க மூத்த சகோதரனுக்கு ஆசை எழுவதில் வியப்பில்லைதானே?


சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் மிக உண்டு! நமதூர் காதர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி முன்பு கீற்றுக் கொட்டகையில் நடந்தது. உமர் தம்பி ஆறாம் வகுப்பு ஆங்கில வகுப்பில் அமர்ந்துகொண்டு, அடுத்திருந்த ஏழாம் வகுப்பில் திரு. ரெங்கராஜன் சார் நடத்தும் அறிவியல் பாடத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்! அதை என்னிடம் வந்து சொல்வார்! திரு ரங்கராஜன் சார் வகுப்பு என்றால் நிரம்பப் பிடிக்கும் உமர் தம்பிக்கு.

மார்க்கோனியைப் போல வானொலிப் பெட்டி செய்யவேண்டும் என்று சிறு வயதிலேயே ஆசை! எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் சாக்பீஸ் பெட்டியால் செய்யப்பட ரேடியோ, அவரால் தொகுக்கப்பட்டது, பாடிக்கொண்டே இருக்கும்! பின்னாளில் உமர் தம்பி கும்பகோணத்தில் நடந்த கண்காட்சியில் ரேடியோ நிலையம் ஒன்றை அமைத்து, பாட்டுகளையும் செய்திகளையும் கண்காட்சிக் கூடம் முழுவதும் ஒலி பரப்பினார். நம் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியைத் தஞ்சை மாவட்டமே பாராட்டியது!

எங்கள் மாமா, ABC பிரிண்டர்ஸ் ஜனாப் S.M. அபூபக்கர் அவர்கள் உமர் தம்பிக்குத் தன் பொறுப்பில் ‘ABC ரேடியோ சர்வீஸ்என்ற பழுது நீக்கும் கடையைத் துவங்கித் தந்தார்கள். முறைப்படி 'லைசென்ஸ்' பெற்றுக் கடை நடந்துவந்தது.

இதற்கிடையில், மருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்த படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! தொடரும்.....


Continue reading at the original source →